பிசிசிஐக்கு தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் 1928ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
1928 முதல் 2022ஆம் ஆண்டுவரை பிசிசிஐ தலைவராக மொத்தம் 37 பேர் இருந்தனர். இதனை தொடர்ந்து 38ஆவது நபராக ரோஜர் பின்னியை தேர்வு செய்துள்ளனர். ரோஜர் பின்னி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆவார். 1983ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 18 விக்கெட்களை வீழ்த்தி, அத்தொடரின் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக திகழ்ந்தார். இப்போது இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல இவரும் முக்கிய காரணம். மதன் லால் கபில் தேவ் ஆகியோருடன் இணைந்து மிரட்டலாக பந்துவீசி வந்தார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார்.
அடுத்து 1985ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கிரிக்கெட் சாம்பியன் தொடரிலும் அதிக விக்கெட்களை (17) கைப்பற்றிய பௌலராக இருந்தார். ஆஸி மண்ணில் துணைக் கண்டத்தை சேர்ந்த பௌலர் சிறப்பாக செயல்பட்டதை, அப்போது உலகமே வியந்து பாராட்டியது.
இவர் 1979ஆம் ஆண்டில் பெங்களூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார். இம்ரான் கான், நவாஸ், சர்பரஸ் போன்ற வலிமைமிக்க பௌலர்களுக்கு எதிராக 46 ரன்களை குவித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்துதான் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட ஆரம்பித்தார்.
பின்னி, கர்சன் கௌரி, ஸ்பின்னர் பிஷன் சிங் பேடி, சந்திரசேகர் போன்றவர்கள் தொடர்ந்து பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அசத்தி வந்தார்கள். பேட்டிங்கில் பின்னியுடன் இணைந்து விக்கெட் கீப்பர் பேட்டர் சையத் கிராமணி, கர்சன் கௌரி ஆகியோர் லோயர் மிடில் ஆர்டரில் பலமிக்கவர்களாக திகழ்ந்து, தோல்வியடையவிருந்த பல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு டிரா செய்து அசத்தியிருக்கிறார்கள்.