அமெரிக்காவின் உளவு அமைப்புகளால் கொரோனா வைரஸின் தோற்றுவாயை கண்டுபிடிக்க முடியவில்லை. கொரோனா வைரஸ் இயற்கையாகவே தோன்றியதா அல்லது ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா என அமெரிக்க உளவு அமைப்புகளே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பிரிந்து இருக்கின்றன என செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை என, அமெரிக்காவின் 18 உளவு அமைப்புகளை மேற்பார்வை செய்யும் அலுவலகம் தீர்மானமாக தன் முடிவை குறிப்பிட்டிருக்கிறது. நிபுணர்களோ, கொரோனா வைரஸின் தோற்றத்துக்கான ஆதாரங்களை சேமிப்பதற்கான காலம் கரைந்து கொண்டிருக்கிறது என எச்சரிக்கிறார்கள்.
சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரோ அந்த அறிக்கை அறிவியலுக்கு எதிரானது என அதை நிராகரித்துள்ளார். தேசிய உளவு அமைப்பு இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வரும் அறிக்கை, அமெரிக்க உளவு முகமைகள் கொரோனா நோய் தொற்றின் தோற்றுவாய் விவகாரத்தில் பிரிந்து கிடப்பதாகக் கூறுகிறது. “அனைத்து உளவு அமைப்புகளும் இரு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்கிறார்கள். அதில் ஒன்று இயற்கையாக பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு ஏற்பட்டது, மற்றொன்று ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்கள்.”
பல பெயர் குறிப்பிடாத உளவு அமைப்புகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அல்லது அதற்கு முன்னோடி வைரஸிடம் இருந்து தொற்று ஏற்பட்டது என கருதுகின்றன. ஆனால் அவர்களுக்கும் இந்த முடிவில் அதிக நம்பிக்கை இல்லை.
மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் கொரோனா வைரஸ் தொற்று, வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்களால் ஏற்பட்டிருக்கலாம், அந்த ஆய்வகம்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளவால்களில் இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருந்தது என மற்றொரு உளவு முகமை ஓரளவுக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.