`குழந்தைத் திருமணங்களை ஊக்குவிப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதேநேரம், `குழந்தைகளின் உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் செயலிழந்து விட்டன’ என்கின்றனர் சமூக செயல்பாட்டாளர்கள். உண்மையில் என்ன நடக்கிறது?
கொரோனா தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. இந்த காலகட்டத்தில் 40 சதவிகிதம் வரையில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இதனைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் கடந்த 31ஆம் தேதி அரசு தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், 1098 சைல்டு லைன் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன், `குழந்தைத் திருமணங்களை நடத்துகிறவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், இத்தகைய திருமணத்தில் கலந்து கொள்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’ என எச்சரித்தார். இந்த ஆய்வில், 2020 மே மாதத்தில் குழந்தைத் திருமணங்கள் 40 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சேலம், தருமபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பழங்குடியின கிராமங்களில் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடந்துள்ளது எனவும் இந்தப் பகுதிகளில் மட்டும் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், 2019 மே மாதம் சேலம் மாவட்டத்தில் 60 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. அதுவே, 2020 மே மாதம் 98 ஆக உயர்ந்துள்ளது.