இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் பும்ரா பங்கேற்கவில்லை. டாஸ் போடும் போது இதுகுறித்து பேசியிருந்த ரோஹித் ஷர்மா, ‘‘பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி இருப்பாதல், இப்போட்டியில் பங்கேற்கவில்லை’’ எனக் கூறியிருந்தார். பும்ரா ஆசியக் கோப்பையின்போதும் இதே பிரச்சினை காரணமாகத்தான் விலகினார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய டி20 தொடரின்போது மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா, ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியிருந்தார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலிருந்து விலகிய அவர், மருத்துவமனையில் சிகிச்சைபெற சென்றார். அப்போது பும்ராவின் காயம் தீவிரமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியப் பிறகு பும்ரா, எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
பும்ரா இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் என்பதாலும், இவருக்கு சரியான மாற்று வீரர் இல்லை என்பதாலும், இது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. பும்ராவுக்கு மாற்றாக ஷமி, உம்ரான் மாலிக், சிராஜ், குல்தீப் சென் ஆகியோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், பும்ராவுக்கு மாற்றாக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் பிசிசிஐ இருப்பது தெரிய வருகிறது.