பிரிட்டனின் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்ச் தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர், ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோருக்கு ஏற்கெனவே இரண்டு மகன்கள் உள்ளனர், அசாஞ்ச் லண்டனின் எக்வடோர் தூதரகத்தில் இருந்தபோது தான் கருத்தரித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார். இந்த நிலையில் தனது திருமணம் தொடர்பான அசாஞ்சின் விண்ணப்பம் “சிறை நிர்வாகியால் வழக்கமான முறையில் பரிசீலிக்கப்பட்டது” என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிஏ என்ற செய்தி முகமையிடம் பேசிய மோரிஸ், “திருமணத்துக்கான காரணம் ஏற்கப்பட்டதால் நிம்மதியாக உணர்கிறேன்,” என்று கூறினார். மேலும், “எங்கள் திருமணத்தில் இனி எந்த இடையூறும் ஏற்படாது என்று நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார். பிரிட்டன் திருமணச் சட்டம் 1983-இன் கீழ் சிறையில் திருமணம் செய்து கொள்ள கைதிகள் விண்ணப்பிக்க உரிமை. உண்டு மேலும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால், வரி செலுத்துவோரின் உதவியின்றி திருமணத்திற்கான முழுச் செலவையும் அவர்களே எதிர்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு மெயில் ஊடகத்துக்கு, தென்னாப்பிரிக்காவில் பிறந்த வழக்கறிஞரான ஸ்டெல்லா மோரிஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் 2015ஆம் ஆண்டு முதல் அசாஞ்சுடன் உறவில் இருந்ததாகவும், தங்களுடைய இரண்டு இளம் மகன்களை தானே வளர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸின் யூடியூப் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், 2011இல் அசாஞ்சின் சட்டக் குழுவில் சேர்ந்தபோது அவரைச் சந்தித்ததாகவும் ஸ்டெல்லா கூறினார். “கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அசாஞ்சை தூதரகத்தில் சந்தித்தேன். அவரை நன்றாகத் தெரிந்து கொண்டேன்,” என்றும் ஸ்டெல்லா குறிப்பிட்டார். 2015இல் காதலித்த இந்த ஜோடி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.