சூழலியல் குறித்த உறுதிமொழிகள் தமிழக அரசியலில் அழுத்தமாக இடம் பிடித்திருக்கின்றன. பெரிய அளவிலான உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கான திட்டங்களைக் காட்டிலும் விவசாயிகள், மீனவர்களின் உரிமைகள் கூடுதல் மதிப்பைப் பெற்றிருக்கின்றன. அ.இ.அ.தி.மு.கவைத் தவிர, 2021 தேர்தல் களத்தில் நிற்கும் அனைத்து முக்கியக் கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தமது தேர்தல் அறிக்கைகளில் தனிப் பகுதியை ஒதுக்கியிருக்கின்றன.
தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படுமா என்னும் ஐயம் நியாயமானதுதான் என்றாலும் அரசியல் சார்ந்த அக்கறைகளில் சூழலியலும் இடம்பெறுவதே தமிழக அரசியலில் வரவேற்கத்தக்க பண்பாட்டு ரீதியான மாற்றத்தைக் குறிக்கிறது. இவை வெறும் அடையாளபூர்வமானவை என்று நிராகரிப்பது அறிவுடைமை ஆகாது. சூழலியல் கோட்பாட்டின் உள்ளூர் வடிவங்களை உருவாக்குவதில் சுய மரியாதை இயக்கம் போன்ற முந்தைய பண்பாட்டு இயக்கங்கள், தமிழர்களின் மொழிசார் அடையாளத்தின் ஆழம் ஆகியவற்றின் ஆற்றலை அவமதிப்பதாக அது அமையும். தொழிற்சாலைகளுக்குப் பதிலாக வேளாண்மையை தமிழகத்தின் அடையாளமாக வரையறுக்கும் போக்கு தற்போது புதிய மதிப்பைப் பெற்றிருக்கிறது.
ஆனால், அரசியல் களத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சதகமான மாற்றத்தை இரண்டு அச்சங்கள் குலைக்கக்கூடியவை. முதலாவதாக, சுயமரியாதையின் அடிப்படையில் அமைந்த சூழலியல் கோட்பாடு என்பது, தமிழ்த் தேசியவாதம் சார்ந்த தீவிரப்போக்கின் துணைப் பிரிவான, “எங்கள் ரத்தம், எங்கள் மண்” என்பதாகச் சறுக்கிவிடக் கூடாது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் அனைவரையும் உள்ளடக்கும் மரபிலிருந்து உருவான வலுவான அரசியல் போக்குகள் இந்த அச்சத்தைத் தணிக்கின்றன. இரண்டாவது அச்சம், பூமியைப் பாதிக்கக்கூடிய சூழலியல் நெருக்கடியின் பிரம்மாண்டத்தன்மையையும் அவசரத்தையும் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கான சாத்தியப்பாடு.
தமிழக அரசியல் என்பது பெருமக்கள் திரளின் விருப்பத்தை மையமாகக் கொண்டது. போராட்டங்களின் மூலமாகவே பெரும்பாலும் வெளிப்படும் மக்களின் விருப்பங்களை அடிப்படையாக வைத்து உருவாவது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து ஜல்லிக்கட்டுப் போராட்டம்வரை போராட்டங்களும் எதிர்ப்பு இயக்கங்களும்தான் தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைக்கின்றன. ஆகவே, சூழலியல் சார்ந்த அக்கறை தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் விழிப்புணர்வு என்பதைக் காட்டிலும் வெகுஜனத்தன்மைதான் காரணம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.