கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரித்ததாகக் கூறி அந்த தேர்தல் அதிகாரியை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறும் காணொளி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்பட ஐந்து பேர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டது. வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 25ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு பெறப்பட்ட 13,957 மனுக்களில் 224 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2,530 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 487 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.