1960-களின் பிற்பகுதியில் மனித குலத்தின் விதியை எழுதும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள்.
அப்போலோ 11 விண்கலத்தில் நிலாவுக்குச் சென்ற மூன்று விஞ்ஞானிகளைக் கொண்ட பேழை பசிபிக் கடலில் மிதந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு உள்ளே இருப்பது அசவுகரியாக இருந்தது. அவர்களை மீட்டு தேசிய ஹீரோக்களாக அறிவிக்க வேண்டும் என்ற முடிவை நாசா அதிகாரிகள் எடுத்தனர். ஆனால் இன்னொரு பக்கம், நிலாவில் இருந்து மனிதர்களைக் கொல்லும் வேற்றுலக நுண்ணுயிரிகள் ஏதும் பூமிக்கு வந்துவிடுவதற்கும் சாத்தியம் இருந்தது.
அதற்கு சில தசாப்தங்களுக்கு முன்பு விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் போன்றோரைக் கொண்ட குழுவுக்கு இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது. முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்படுவதற்கு முன்பு, அது உலகத்தையே அழித்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. வளிமண்டலம் முற்றிலுமாக அழிந்து உயிர்கள் வாழமுடியாத சூழல் ஏற்படக்கூடும் என்று கருதப்பட்டது.
இப்படி, கடந்த நூற்றாண்டின் சில தருணங்களில், உலகத்தின் தலைவிதியையே சிலர் அடங்கிய குழுக்கள் தங்களது கைகளில் வைத்திருந்தன. சிறிய அளவு சாத்தியமே என்றாலும், ஒட்டுமொத்தமாக பூமியை அழித்துவிடும் அபாயங்கள் அவர்களின் முடிவுகளில் இருந்தன. அது அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக எல்லாவற்றின் முடிவாகவும் இருந்திருக்கும்.