‘ஒரு நாள் நான் பேருந்து தரிப்பிடத்தில் பகல் வேளையில் நின்று கொண்டிருந்த போது, போலீஸார் என்னை அழைத்து சென்றனர். எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றியே என்னை அழைத்து சென்றார்கள்.
இரவு 11 மணி வரை போலீஸ் நிலையத்தில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைத்திருந்தார்கள். இரவு 11 மணிக்கே வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார்கள். பிறகு வீதியில் அலைந்து திரிந்ததாக குற்றம்சாட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்கள்.”வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள ஏன் இரவு வரை காக்க வைத்தார்கள் என்பதை பின்னரே நான்
அறிந்துக்கொண்டேன்.
“இரவு வேளையிலேயே இவரை நாம் கைது செய்தோம் என நீதிமன்றத்தில் அப்போது தானே உரக்கக் கூற முடியும். போலீஸாருக்கு வழக்குகள் குறையும் போது, எம்மை போன்றவர்களை தேடி வருவார்கள்” ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழும் மாதவி, தான் எதிர்நோக்கியுள்ள ஆயிரம் கசப்பான அனுபவங்களில் ஒன்றை மட்டும் நம்மிடையே வெளிப்படுத்தினார்.
மாதவி, ஒரு திருநங்கை. 32 வயதாகிறது. தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார். பெற்றோரிடம் இருந்து பிரிந்த அவருக்கு, பாலின மாற்றம் காரணமாக தமது கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ”அரசின் சட்டங்கள், எங்களை போன்ற அப்பாவிகளை வேட்டையாட மாத்திரமே பயன்படுத்துகிறார்கள்” என மாதவி மிகவும் கூறுகிறார். இது வீதியோர சட்டம் என அழைக்கப்படுகிறது. பிரித்தானியா ஆட்சிக் காலத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டளை சட்டமொன்றின் ஊடாக, இந்த சட்டத்திற்கான அடித்தளம் அமைக்க்பட்டது.