தமிழகத்தில் முழுநாள் ஊரடங்கு இன்று கடைப்பிடிக்கபடுவதால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியவசிய தேவைக்கான மளிகை, ஆவின், மருந்து கடைகள் தவிர பிற கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,கோவை, மதுரை போன்ற நகரங்களில் அத்தியாவசிய போக்குவரத்து தவிர பிற போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்களின் போக்குவரத்து மட்டுமே பெரும்பாலும் காணப்படுகிறது. மக்கள் பொது வெளியில் வருவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளதை காண முடிகிறது. எல்லா நகரங்களிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வருபவர்கள் சுகாதாரதுறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை நகரத்தில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. உணவு பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்பதால், ஸ்விகி, ஸொமேட்டோ போன்ற உணவு எடுத்துச்செல்லும் பணியாளர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என்பதால், அந்த உணவகங்களை நம்பி இருப்பவர்கள் அங்கு செல்ல தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தடுப்பூசி மையங்களுக்கு செல்லப்பவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவை தவிர பிற அறுவை சிகிச்சை பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா பணிகளுக்காக மருத்துவர்கள் பல இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த மினி கிளினிக்கள் செயல்படவில்லை.